17.10.2018    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! இல்லற விசயங்களில் இருந்து கொண்டே அனைவருடனும் உறவைப் பராமரிக்க வேண்டும். வெறுப்பு காட்டக் கூடாது. ஆனால் தாமரை மலர் போல கண்டிப்பாக தூய்மையடைய வேண்டும்.

 

கேள்வி:

உங்களுடைய வெற்றி முரசு எப்போது ஒலிக்கும்? ஆஹா, ஆஹா என்ற ஆரவாரம் எப்படி வெளிப்படும்?

 

பதில்:

இறுதிக் காலத்தில், குழந்தைகளாகிய உங்கள் மீது மாயையின் கிரஹாச்சாரம் அமர்வது நிற்கும் போது, சதா (நினைவின் யாத்திரையில்) வழி தெளிவாக இருக்கும்போது ஆஹா, ஆஹா என்ற ஆரவாரம் எழும்பும், வெற்றியின் முரசு ஒலிக்கும். இப்போதோ, குழந்தைகள் மீது கிரஹாச்சாரம் அமர்ந்து விடுகிறது. தடைகள் ஏற்பட்டபடி இருக்கிறது. சேவைக்காக 3 அடி நிலம் கூட கிடைப்பது கடினமாக உள்ளது, ஆனால் குழந்தைகளாகிய நீங்கள் உலகின் எஜமானன் ஆகப் போகிறீர்கள், அப்படிப்பட்ட நேரமும் வரப்போகிறது

பாடல்:

பொறுமையாய் இரு மனமே. . .

 

ஓம் சாந்தி.

இப்போது பழைய நாடகம் முடிவடைந்துள்ளது என்பதை குழந்தைகள் வரிசைக்கிரமமான முயற்சியின் அடிப்படையில் அறிந்துள்ளனர். துக்கத்தின் நாட்கள் இன்னும் சிறிது சமயத்திற்குத்தான் உள்ளது, பிறகு சதா சுகமே சுகம் ஏற்படும். சுகத்தைப் பற்றி தெரிய வரும்போது இது துக்க தாமம், மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது என்று புரிந்து கொள்ளப்படுகிறது. இப்போது சுகத்திற்காக நீங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். இந்த துக்கம் நிறைந்த பழைய நாடகம் முடிவடைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். சுகத்திற்காக பாப்தாதாவின் ஸ்ரீமத்படி நடந்து கொண்டிருக்கிறீர்கள். யாருக்கும் புரிய வைப்பது மிகச் சுலபமே. இப்போது பாபாவிடம் செல்ல வேண்டும். பாபா அழைத்துச் செல்ல வந்திருக்கிறார். இல்லற விசயங்களில் இருந்தபடி தாமரை மலர் போல தூய்மையானவராகி இருக்க வேண்டும். உறவை கண்டிப்பாக பராமரிக்க வேண்டும். உறவைப் பராமரிக்காவிட்டால் சன்னியாசிகள் போல ஆகி விடுகிறீர்கள். அவர்கள் உடன் இருப்பதில்லை, ஆகையால் அது துறவற மார்க்கம், ஹடயோகம் என்று சொல்லப்படுகிறது. சன்னியாசிகள் மூலம் சொல்லிக் கொடுக்கப்படுவது ஹடயோகம் ஆகும். நாம் இராஜயோகம் கற்றுக் கொள்கிறோம். அதை பகவான் கற்றுக் கொடுக்கிறார். பாரதத்தின் தர்ம சாஸ்திரம் கீதையே ஆகும். பிறருடைய தர்ம சாஸ்திரங்கள் என்ன என்பதில் நமக்கு எந்தத் தொடர்பும் இல்லை. சன்னியாசிகள் ஒன்றும் இல்லற தர்மத்தவர்கள் அல்ல, அவர்களுடையது ஹடயோகம். வீடு வாசலை விட்டு காட்டில் சென்று அமர்ந்து கொள்கிறார்கள், பிறவி பிறவியாக அவர்கள் துறவறம் எடுக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் இல்லற விசயங்களில் இருந்தபடி ஒரு முறை சன்னியாசம் செய்கிறீர்கள், பிறகு 21 பிறவிகள் அதன் பலனை அடைகிறீர்கள். அவர்களுடையது எல்லைக்குட்பட்ட சன்னியாசம் மற்றும் ஹடயோகம், உங்களுடையது எல்லைக்கப்பாற்பட்ட சன்னியாசம், இராஜயோகம். அவர்களோ வீடு வாசலை விட்டு விடுகின்றனர். இராஜயோகத்திற்கு மிகவும் புகழ் உள்ளது. பகவான் இராஜயோகம் கற்றுத் தந்தார் எனும்போது பகவான் தான் கண்டிப்பாக உயர்விலும் உயர்வானவர் என்று கூறுவோம். ஸ்ரீகிருஷ்ணர் பகவானாக இருக்க முடியாது. எல்லைக்கப்பாற்பட்ட தந்தையாக நிராகாரமானவர் (உடலற்றவர்). எல்லைக்கப்பாற்பட்ட இராஜ்யத்தை அவர்தான் கொடுக்க முடியும். இங்கே இல்லற விசயங்கள் மீது வெறுப்பு ஏற்படுத்துவதில்லை. இந்த இறுதிப் பிறவியில் இல்லற விசயங்களில் இருந்தபடியே தூய்மை யடையுங்கள் என்று தந்தை கூறுகிறார். பதீத பாவனர் என எந்த சன்னியாசியையும் கூறப்படுவதில்லை. சன்னியாசிகளே பதீத பாவனா. . . என்று பாடுகின்றனர், அவரை நினைவு செய்கின்றனர், அவர்களும் தூய்மையான உலகை விரும்புகின்றனர். ஆனால் அந்த உலகமே வேறு என்பதை அவர்கள் அறிவதில்லை. அவர்கள் இல்லற விசயங்களிலேயே இருப்பதில்லை  எனும்போது அவர்கள் தேவதைகளையும் ஒப்புக்கொள்வதில்லை. அவர்கள் ஒருபோதும் இராஜயோகம் கற்றுத்தர முடியாது. தந்தை ஒருபோதும் ஹட யோகம் கற்றுத் தர முடியாது, சன்னியாசிகள் ஒருபோதும் இராஜயோகம் கற்றுத் தர முடியாது. இது புரிந்து கொள்ள வேண்டிய விசயம். இப்போது டில்லியில் உலக நாடுகளுக்கிடையிலான மாநாடு (கான்ஃபரன்ஸ்) நடக்கிறது, அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும், எழுத்து மூலமாக அனைவருக்கும் வினியோகம் செய்ய வேண்டும். அங்கே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு விடும். எழுத்து மூலம் கொடுக்கும்போது இவர்களுடைய குறிக்கோள் என்ன என அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

 

இப்போது நீங்கள் புரிந்திருக்கிறீர்கள் - நாம் பிராமண குலத்தவர்கள், நாம் சூத்திர குலத்தவரின் உறுப்பினராக எப்படி ஆக முடியும்? மேலும் விகாரி குலத்தில் நாம் நம்மை எப்படி பதிவு செய்து கொள்ள முடியும்? ஆகையால் மறுத்து விடுகின்றனர். நாம் ஆஸ்திகர்கள், அவர்கள் நாஸ்திகர்கள். அவர்கள் ஈஸ்வரனை ஏற்பதில்லை, நாம் ஈஸ்வரனுடன் நினைவின் தொடர்பை ஏற்படுத்துபவர்கள். கருத்துவேறுபாடு ஏற்பட்டு விடுகின்றன. யார் தந்தையை அறிவதில்லையோ அவர்கள் நாஸ்திகர்கள் என புரிய வைக்கப் படுகிறது. ஆக தந்தைதான் வந்து ஆஸ்திகர்களாக ஆக்குவார். தந்தையுடையவர்களாக ஆகும்போது ஆஸ்தி கிடைத்து விடுகிறது. இவை மிகவும் ஆழமான விசயங்கள் ஆகும். முதன் முதலில் கீதையின் பகவான் பரமபிதா பரமாத்மா என்பதை புத்தியில் பதிய வைக்க வேண்டும். அவர்தான் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்தார். பாரதத்தின் தேவி தேவதா தர்மமே முக்கியமானது. பாரத கண்டத்தினுடைய தர்மம் ஏதாவது இருக்க வேண்டும் அல்லவா! தம்முடைய தர்மத்தை மறந்து விட்டுள்ளனர். நாடகத்தின்படி பாரதவாசிகள் தமது தர்மத்தை மறந்து போக வேண்டும், அப்போதுதான் மீண்டும் தந்தை வந்து ஸ்தாபனை செய்வார் என்பதையும் கூட நீங்கள் அறிவீர்கள். இல்லையென்றால் பிறகு தந்தை வருவது தான் எப்படி? எப்போதெல்லாம் தேவி தேவதா தர்மம் மறைந்து விடுகிறதோ அப்போது நான் வருகிறேன். கண்டிப்பாக மறைந்து போக வேண்டும். காளையின் ஒரு கால் முறிந்து விட்டது, மூன்று காலில் நிற்கிறது என்று கூறுகின்றனர் அல்லவா! ஆக முக்கியமானவை 4 தர்மங்கள் ஆகும். இப்போது தேவதா தர்மம் எனும் கால் முறிந்துள்ளது. அதாவது அந்த தர்மம் மறைந்து போய் விட்டுள்ளது. ஆகையால் ஆல மரத்தின் உதாரணம் கூறப்படுகிறது - இதனுடைய அடிமரம் இற்றுப் போய் விட்டது. மற்ற இலை, கிளைகள் எவ்வளவு நின்றுள்ளன! ஆக இவற்றிலும் கூட வேர் போன்ற தேவதா தர்மம் இல்லவே இல்லை. மற்றபடி முழு உலகத்தில் மடாதிபதிகள் எவ்வளவு பேர் உள்ளனர்!  உங்களுடைய புத்தியில் இப்போது முழு வெளிச்சமும் (விழிப்புணர்வும்) உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் இந்த நாடகத்தை தெரிந்து கொண்டுள்ளீர்கள் என்று தந்தை கூறுகிறார். இப்போது இந்த முழு மரமும் பழையதாகி விட்டது. கலியுகத்திற்குப் பிறகு கண்டிப்பாக சத்யுகம் வர வேண்டும். சக்கரம் கண்டிப்பாக திரும்பவும் சுற்ற வேண்டும். புத்தியில் இதை வைக்க வேண்டும் - இப்போது நாடகம் முடிந்து விட்டது, நாம்(வீட்டிற்கு) சென்று கொண்டிருக்கிறோம். நடந்து சுற்றியபடியும், அமர்ந்து எழுந்தபடியும் கூட நினைவு இருக்க வேண்டும் - இப்போது நாம் திரும்பிச் செல்ல வேண்டும். மன்மனாபவ, மத்யாஜீபவ என்பதன் அர்த்தமே இதுதான். எந்த ஒரு பெரிய சபையிலும் சொற்பொழிவு முதலானவை நடத்தும் போது இதைத்தான் புரிய வைக்க வேண்டும் - குழந்தைகளே, தேகத்துடன் சேர்த்து தேகத்தின் அனைத்து தர்மங்களையும் தியாகம் செய்து, தன்னை ஆத்மா எனப் புரிந்து கொண்டு, தந்தையை நினைவு செய்தால் பாவங்கள் அழியும் என்று பரமபிதா பரமாத்மா மீண்டும் கூறுகிறார். நான் உங்களுக்கு இராஜயோகம் கற்றுத் தருகிறேன். இல்லற விசயங்களில் இருந்தபடியே தாமரை மலர் போல் ஆகி என்னை நினைவு செய்யுங்கள், தூய்மையாக இருங்கள், ஞானத்தை தாரணை செய்யுங்கள். இப்போது அனைவரும் துர்க்கதியில் இருக்கின்றனர். சத்யுகத்தில் தேவதைகள் சத்கதியில் இருந்தனர். பிறகு தந்தைதான் வந்து சத்கதியை வழங்குகிறார். அனைத்து குணங்களிலும் நிறைந்தவர், 16 கலைகளும் நிரம்பியவர் . . . . இது சத்கதியின் இலட்சணமாகும். இதை யார் கொடுப்பது? தந்தை. அவரது இலட்சணங்கள் என்ன? அவர் ஞானக் கடல், ஆனந்தக் கடல். அவரது மகிமை முழுக்க முழுக்க தனிப்பட்டதாகும். அனைவருடைய இலட்சணமும் ஒன்று என்பது அல்ல. ஒரு தந்தையின் குழந்தைகள் அனைவரும் ஆத்மாக்கள் ஆவீர்கள். பிரஜாபிதாவின் வாரிசுகளும் இருப்பார்கள். இப்போது புது படைப்பு படைக்கப்படுகிறது. பிரஜாபிதாவின் வாரிசுகள் அனைவரும்தான் ஆவார்கள், ஆனால் அந்த மனிதர்களுக்கு இந்த விசயங்கள் தெரியாது. அனைத்திலும் உயர்வானது பிராமண வர்ணம் ஆகும். பாரதத்தின் வர்ணங்கள்தான் பாடப் படுகின்றன. 84 பிறவிகள் எடுப்பதில் இந்த வர்ணங்களிலிருந்து கடந்து வந்துதான் ஆக வேண்டும். பிராமண வர்ணம் இருப்பதே சங்கமயுகத்தில்தான்.

 

குழந்தைகளாகிய நீங்கள் இப்போது இனிமையான அமைதியில் இருக்கிறீர்கள். இந்த அமைதி அனைத்தையும் விட நல்லதாகும். உண்மையில் அமைதி எனும் மாலை கழுத்தில் இருக்கிறது. அமைதியான வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று அனைவருமே விரும்புகின்றனர். ஆனால் இதற்கான பாதையை யார் காட்டுவார்கள்? அமைதிக்கடலைத் தவிர வேறு யாரும் காட்ட முடியாது. நல்ல பட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன - அமைதிக் கடல், ஞானக் கடல். ஸ்ரீகிருஷ்ணரோ சொர்க்கத்தின் இளவரசர். அவர் (சிவபாபா) மனித சிருஷ்டியின் விதை ரூபம். எவ்வளவு இரவு பகல் வித்தியாசம் உள்ளது. கிருஷ்ணரை சிருஷ்டியின் விதை என்று கூறுவதில்லை. சர்வவியாபி என்ற ஞானம் இருக்க முடியாது. தந்தைக்கு அவருடைய மகிமை தனிப்பட்டதாக உள்ளது. அவர் எப்போதும் பூஜைக்குரியவர், ஒருபோதும் பூஜாரி ஆவதில்லை. மேலிருந்து முதலில் வருபவர்கள் பூஜைக்குரியவரிலிருந்து பூஜாரி ஆகின்றனர். ஞான விசயங்கள் நிறைய புரிய வைக்கப்படுகின்றன. கண்காட்சிகளில் எவ்வளவோ பேர் வருகின்றனர், ஆனால் கோடியில் சிலர்தான் வெளிப்படுகின்றனர். ஏனென்றால் இலட்சியம் மிகவும் உயர்ந்ததாக உள்ளது. பிரஜைகளோ நிறைய பேர் ஆனபடி இருப்பார்கள். மாலையில் வரக்கூடிய மணிகள் கோடியில் சிலர்தான் வெளிப்படுகின்றனர். நாரதரின் உதாரணமும் உள்ளது, உனது முகத்தை நீயே பார்த்துக்கொள் - இலட்சுமியை மணமுடிக்க தகுதி வாய்ந்தவனாக இருக்கிறாயா என்று கேட்கப்பட்டார். பிரஜைகள் நிறைய பேர் ஆக வேண்டும். என்றாலும் இராஜா இராஜாதான். ஒவ்வொரு இராஜாவுக்கும் இலட்சக்கணக்கான பிரஜைகள் இருப்பார்கள். உயர்வான முயற்சி செய்ய வேண்டும். இராஜாக்களிலும் கூட சிலர் பெரிய இராஜாவாகவும், சிலர் சிறிய இராஜாவாகவும் இருப்பார்கள். பாரதத்தில் எத்தனை இராஜாக்கள் இருந்தனர்! சத்யுகத்திலும் நிறைய இராஜாக்கள் இருப்பார்கள். இது சத்யுகத்திலிருந்து நடந்து வருகிறது. மஹாராஜாக்களின் சொத்து நிறைய இருக்கும், இராஜாக்களுடையது குறைவாக இருக்கும். இது ஸ்ரீலட்சுமி நாராயணர் ஆவதற்கான ஞானமாகும். அதற்காகத்தான் முயற்சி நடந்து வருகிறது. இலட்சுமி நாராயணரின் பதவி அடைவீர்களா? அல்லது இராமன் சீதையா? என்று கேட்டால், நாங்கள் இலட்சுமி நாராயணரின் பதவியைத்தான் அடைவோம், தாய் தந்தையரிடமிருந்து முழுமையான ஆஸ்தி எடுப்போம் என்று கூறுகின்றனர். இவை அதிசயமான விசயங்கள் அல்லவா! வேறு எந்த சத்சங்களிலும் இந்த விசயங்கள் இல்லை, சாஸ்திரங்களிலும் இல்லை. இப்போது உங்களுடைய புத்தியின் பூட்டு திறக்கப்பட்டுள்ளது. நாம் நடிகர்கள், இப்போது நாம் திரும்பிச்செல்ல வேண்டும் என்று நடந்து சுற்றியபடி இருந்தாலும் புரிந்து கொள்ளுங்கள். இது மன்மனாபவ, மத்யாஜிபவ என்று கூறப்படுகிறது. தந்தை அடிக்கடி நினைவூட்டுகிறார் - நான் உங்களை திரும்ப அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன். இது ஆன்மீக யாத்திரையாகும். இந்த யாத்திரை தந்தையைத் தவிர வேறு யாரும் செய்விக்க முடியாது. பாரதத்தின் மகிமையும் நிறைய பாட வேண்டும். இந்த பாரதம் மிகவும் புனிதமான பூமியாகும். அனைவரின் துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுப்பவர், அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் ஒரே தந்தை ஆவார். பாரதம் அவரது பிறப்பிடமாகும். அந்த தந்தை அனைவரையும் விடுவிப்பவர் ஆவார். அவருடைய பெரியதிலும் பெரியதான தீர்த்த ஸ்தலம் இங்கே (பாரதத்தில்) உள்ளது. பாரதவாசிகள் சிவனின் கோவிலுக்குச் செல்கின்றனர், ஆனால் அவரைப் பற்றி தெரியாது. காந்தியைப் பற்றி தெரிந்திருக்கின்றனர், அவர் மிகவும் நல்லவராக இருந்தார் என்று புரிந்துள்ளனர், ஆகையால் சென்று அவர் நினைவுச் சின்னம் மீது மலர்களைத் தூவுகின்றனர், இலட்சக்கணக்கில் செலவு செய்கின்றனர். இப்போது இந்த சமயம் அவர்களுடைய இராஜ்யம்தான் இருக்கிறது. விரும்பியதைச் செய்ய முடியும். தந்தை அமர்ந்து இந்த குப்தமான (மறைமுகமான) தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார், இந்த இராஜ்யமே தனிப்பட்டது. பாரதத்தில் முதன் முதலில் தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. தேவதைகள் மற்றும் அசுரர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டது என்று காட்டுகின்றனர். ஆனால் அப்படிப்பட்ட விசயம் ஏதுமில்லை. இங்கே யுத்த மைதானத்தில் மாயையின் மீது வெற்றி கொள்ளப் படுகிறது, சர்வசக்திவான் தான் கண்டிப்பாக மாயையின் மீது வெற்றி அடையச் செய்ய முடியும். கிருஷ்ணர் சர்வசக்திவான் என்று கூறப்படுவதில்லை. பாபாதான் இராவண இராஜ்யத்திலிருந்து விடுவித்து இராம இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். மற்றபடி அங்கே சண்டை முதலான விசயங்கள் ஏதும் இருப்பதில்லை. இப்போது பார்த்தோம் என்றால் சிருஷ்டியில் சர்வசக்திவானாக இருப்பவர்கள் கிறிஸ்தவர்கள். அவர்கள் விரும்பினால் அனைவரையும் வெற்றி கொள்ள முடியும். ஆனால் அவர்கள் உலகின் எஜமானன் ஆவது என்பது சட்டத்தில் இல்லை. இந்த இரகசியத்தை நீங்கள்தான் அறிவீர்கள். இந்த சமயத்தில் சர்வசக்திவான் இராஜ்யம் கிறிஸ்தவர்களுடையதாக உள்ளது. இல்லாவிடில் அவர்களின் மக்கள் தொகை குறைவாக இருக்க வேண்டும், ஏனென்றால் கடைசியில் வந்துள்ளனர். ஆனால் 3 தர்மங்களில் இந்த தர்மம் அனைத்தையும் விட தீவிரமானது. இதுவும் கூட நாடகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலம்தான் பிறகு நமக்கு இராஜ்யம் கிடைக்க வேண்டும். கதையும் உள்ளது - இரண்டு பூனைகளின் சண்டையில் மூன்றாவதாக வேறொருவருக்கு வெண்ணெய் கிடைத்தது. ஆக, அவர்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொள்வார்கள், இடையில் வெண்ணெய் பாரதவாசி களுக்குத்தான் கிடைக்க வேண்டும். கதை சில்லறைத்தனமாக உள்ளது, அர்த்தம் எவ்வளவு பெரியதாக உள்ளது. மனிதர்கள் புரியாதவர்களாக இருக்கின்றனர். நடிகர்களாக இருந்தாலும், நாடகத்தைப் பற்றி தெரியாது, மூடர்களாக ஆகிக் கிடக்கின்றனர். ஏழைகள்தான் புரிந்து கொள்கின்றனர். பணக்காரர்கள் கொஞ்சமும் புரிந்து கொள்வதில்லை. ஏழைப் பங்காளர், பதீத பாவனரான தந்தை பாடப் பட்டிருக்கிறார். இப்போது நடைமுறையில் நடிப்பை நடித்துக் கொண்டிருக்கிறார். பெரிய பெரிய சபைகளில் நீங்கள் புரிய வைக்க வேண்டும். மெது மெதுவாக ஆஹா ஆஹா என்ற கோஷம் எழும்பும், கடைசி நிமிடத்தில் வெற்றி முரசு ஒலிக்க வேண்டும். இப்போது குழந்தைகளின் மீது கிரஹாச்சாரம் அமர்ந்திருக்கிறது. (நினைவு யாத்திரையின்) வழி தெளிவாக இல்லை. தடைகள் ஏற்பட்டபடி இருக்கின்றன. இவைகளும் கூட நாடகத்தின்படி ஏற்பட்டுக்கொண்டிருக்கும். எவ்வளவு முயற்சி செய்கிறீர்களோ அவ்வளவு உயர்ந்த பதவியை அடைவீர்கள். பாண்டவர்களுக்கு 3 அடி நிலம் கூட கிடைக்காமலிருந்தது. இது இப்போதைய ஞாபகார்த்தமே ஆகும் ஆனால் அவர்கள்தான் நடைமுறையில் உலகின் எஜமான் ஆகினார்கள் என்பது யாருக்கும் தெரியாது. குழந்தைகளாகிய நீங்கள் இப்போது தெரிந்துள்ளீர்கள். இதில் வருத்தம் எதுவும் கொள்ளப்படுவதில்லை. கல்பத்திற்கு முன்பும் கூட இப்படி நடந்தது. நாடகத்தின் போக்கில் நம்பிக்கை கொள்ள வேண்டும், அசைந்து விடக் கூடாது. இப்போது நாடகம் முடிவடைகிறது. சுகதாமம் செல்கிறோம். உயர் பதவி அடைந்து விடும்படியாக நன்றாகப் படிப்பை படிக்க வேண்டும். நல்லது!

 

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளூக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. நடந்து சுற்றியபடி இருப்பினும், தன்னை நடிகன் என்று புரிந்து கொள்ள வேண்டும். நாடகத்தின் போக்கில் கொண்டுள்ள நம்பிக்கையில் அசைக்க முடியாதவராக இருக்க வேண்டும். இப்போது நாம் வீடு திரும்புகிறோம், நாம் யாத்திரையில் இருக்கிறோம் என்பது புத்தியில் இருக்க வேண்டும்.

 

2. சத்கதிக்கான அனைத்து இலட்சணங்களையும் தன்னுள் தாரணை செய்ய வேண்டும். அனைத்து குணங்களும் நிறைந்தவராக, 16 கலைகளும் நிரம்பியவர்களாக ஆக வேண்டும்.

 

வரதானம்:

சகயோகத்தின் சுபபாவனை மூலம் ஆன்மிக வாயுமண்டலத்தை உருவாக்கக் கூடிய மாஸ்டர் வள்ளல் ஆகுக.

 

எப்படி இயற்கை தனது வாயுமண்டலத்தின் பிரபாவத்தை அனுபவம் செய்விக்கிறது -- சில நேரம் வெப்பம், சில நேரம் குளிர் அது போல் நீங்கள் இயற்கையை வென்றவர்கள், சதா சகயோகி, சகஜயோகி ஆத்மாக்கள், தங்களின் சுபபாவனைகள் மூலம் ஆன்மிக வாயுமண்டலத்தை உருவாக்குவதில் சகயோகி ஆகுங்கள். அவர் இப்படி இருக்கிறார், இப்படிச் செய்கிறார் என்று அது போல் யோசிக்காதீர்கள். எத்தகைய வாயு மண்டலமானாலும், மனிதரானாலும், நான் சகயோகம் கொடுத்தாக வேண்டும். வள்ளலின் குழந்தைகள் எப்போதுமே கொடுப்பவர்கள். ஆகவே மனதால் சகயோகி ஆனாலும் சரி, வாய்மொழியால் ஆனாலும் சரி, சம்மந்தம் தொடர்பினால் ஆனாலும் சரி, ஆனால் இலட்சியம் இருக்கட்டும் -- அவசியம் சகயோகி ஆக வேண்டும்.

 

சுலோகன் :

இச்சா மாத்திரம் அவித்யா ஸ்திதி (ஆசை என்னவென்று அறியாத நிலை) மூலம் அனைவரின் இச்சைகளையும் பூர்த்தி செய்வது தான் காமதேனு ஆவதாகும்.

 

ஓம்சாந்தி