12.09.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! மனதிற்குள் இரவு பகல் பாபா பாபா என்று (நினைவு) ஓடிக் கொண்டே இருந்தால் அளவற்ற குஷி ஏற்படும், பாபா நமக்கு குபேரனின் பொக்கிஷம் கொடுக்க வந்திருக்கின்றார் என்பது புத்தியில் இருக்கும்.

 

கேள்வி:

பாபா எந்த குழந்தைகளை நேர்மையான மலர் என்று கூறுகின்றார்? அவர்களது அடையாளம் என்ன?

 

பதில்:

ஒருபொழுதும் மாயைக்கு வசமாகாமல் இருப்பவர்கள் தான் நேர்மையான மலர்கள் ஆவர். அவர்கள் மாயையின் சுழலில் (பிடியில்) வர மாட்டார்கள். இவ்வாறு நேர்மையான மலர்கள் கடைசியில் வந்தாலும் வேகமாக செல்வதற்கான முயற்சி செய்வார்கள். அவர்கள் பழையவர்களை விட முன்னால் செல்வதற்கான இலட்சியம் வைப்பார்கள். தனது அவகுணங்களை நீக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பர். மற்றவர்களது அவகுணங்களைப் பார்க்கமாட்டார்கள்.

 

ஓம்சாந்தி.

சிவபகவானின் மகாவாக்கியம். அவர் ஆன்மீகத் தந்தை ஆவார், ஏனெனில் சிவன் பரம ஆத்மா அல்லவா! ஆத்மா அல்லவா! தந்தை தினமும் புதுப் புது விசயங்களைப் புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார். கீதையை கூறக் கூடிய சந்நியாசிகள் பலர் இருக்கின்றனர். அவர்கள் தந்தையை நினைவு செய்ய முடியாது. பாபா என்ற வார்த்தை ஒருபொழுதும் அவர்களது வாயில் வெளிப்பட முடியாது. இந்த வார்த்தை இல்லற மார்க்கத்தினருக்கானது ஆகும். அவர்கள் துறவற மார்க்கத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் பிரம்மத்தை மட்டுமே நினைவு செய்கின்றனர். வாயில் ஒருபொழுதும் சிவபாபா என்று கூறமாட்டார்கள். நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். பெரிய பெரிய வித்வான்கள், சந்நியாசிகள், சின்மயானந்தர் போன்றவர்கள் கீதை கூறுகின்றனர் எனில் அவர்கள் கீதையின் பகவான் கிருஷ்ணர் என்று புரிந்து கொண்டு கிருஷ்ணரிடம் யோகா (தொடர்பு) வைத்திருப்பர் என்பது கிடையாது. அவர்கள் பிரம்மத்துடன் யோகா வைத்திருக்கும் பிரம்ம ஞானி அல்லது தத்துவ ஞானிகள் ஆவர். கிருஷ்ணரை யாராவது பாபா என்று கூறுவார்களா! ஒருபொழுதும் கூறவே முடியாது. ஆக கிருஷ்ணர் கீதை கூறக் கூடிய பாபா இல்லை என்று ஆகிவிடுகிறது அல்லவா! சிவனை அனைவரும் பாபா என்று கூறுகின்றனர். ஏனெனில் அவர் அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை ஆவார். பரம்பிதா பரமாத்மா என்று அனைத்து ஆத்மாக்களும் அவரை அழைக்கின்றனர். அவர் சுப்ரீம், பரம் (உயர்ந்த) ஆக இருக்கின்றார். ஏனெனில் பரந்தாமத்தில் இருக்கக் கூடியவர். நீங்கள் அனைவரும் கூட பரந்தாமத்தில் இருக்கிறீர்கள். ஆனால் அவரை பரமாத்மா என்று கூறுகின்றோம். அவர் ஒருபொழுதும் பிறப்பு இறப்பில் வருவது கிடையாது. எனது பிறப்பு தெய்வீகமானது மற்றும் அலௌகீகமானது என்று அவரே கூறுகின்றார். இவ்வாறு ஏதாவது இரதத்தில் பிரவேசமாகி உங்களை உலகிற்கு எஜமானர் ஆக்குவதற்கான யுக்தி கூறுவது என்பது வேறு யாராலும் முடியாது. அதனால் தான் தந்தை கூறுகின்றார் - நான் யார்? நான் எப்படி இருக்கின்றேன்? என்பதை யாரும் அறியவில்லை. நான் எப்பொழுது எனது அறிமுகத்தைக் கொடுக்கிறேனோ அப்பொழுது தான் அறிந்து கொள்ள முடியும். இவர்கள் பிரம்மத்தை அதாவது தத்துவத்தை ஏற்றுக் கொள்பவர்கள், பிறகு கிருஷ்ணரை தனது தந்தை என்று எவ்வாறு ஏற்றுக் கொள்வர்? ஆத்மாக்கள் அனைவரும் குழந்தைகளாக ஆகிவிடுகின்றனர் அல்லவா! கிருஷ்ணரை அனைவரும் பிதா என்று எவ்வாறு கூறுவர்? கிருஷ்ணர் அனைவருக்கும் தந்தையாக இருக்கின்றார் என்று கூறமாட்டார்கள். நாம் அனைவரும் சகோதரர்கள். கிருஷ்ணர் சர்வவியாபி என்றும் கூற முடியாது. அனைவரும் கிருஷ்ணராக ஆகிவிட முடியாது. ஒருவேளை அனைவரும் கிருஷ்ணர் எனில் அவருக்கு தந்தையும் இருக்க வேண்டும். மனிதர்கள் அதிக மறதியில் இருக்கின்றனர். அறியாமல் இருப்பதால் தான் என்னை கோடியில் சிலர் மட்டுமே அறிவர் என்று கூறுகின்றார். கிருஷ்ணரை யார் வேண்டுமென்றாலும் அறிந்து கொள்வர். அயல்நாட்டினர் அனைவரும் அவரை அறிவர். கிருஷ்ண பிரபு (லார்ட்) என்று கூறுகின்றனர் அல்லவா! சித்திரங்களும் உள்ளன, உண்மையான சித்திரம் கிடையவே கிடையாது. பாரதவாசிகளிடமிருந்து கேட்கிறார்கள், இவருக்கு அதிக பூஜைகள் நடக்கின்றது என்பதற்காக கீதையில் கிருஷ்ண பகவான் என்று எழுதி விட்டனர். பகவானை என்றாவது பிரபு (லார்ட்) என்று கூறுவார்களா என்ன! கிருஷ்ண பிரபு என்று கூறுகின்றனர் அல்லவா! பிரபு என்ற பட்டம் உண்மையில் பெரிய மனிதர்களுக்குத் தான் கிடைக்கும். அவர்கள் அனைவருக்கும் கொடுத்துக் கொண்டே இருப்பர், இது தான் இருட்டான நகரம் என்று கூறப்படுகிறது ..... பதீத மனிதர்களை பிரபு என்று கூறிவிடுகின்றனர். இன்றைய பதீத மனிதர்கள் எங்கு இருக்கின்றனர்! எங்கு சிவன் அல்லது ஸ்ரீகிருஷ்ணர்! நான் உங்களுக்கு என்ன ஞானம் கொடுக்கிறேனோ பிறகு அது மறைந்து விடும். நான் வந்து தான் புது உலகை ஸ்தாபனை செய்கிறேன். ஞானத்தையும் இப்பொழுது தான் நான் கொடுக்கிறேன். நான் ஞானம் கொடுக்கின்ற பொழுது தான் குழந்தைகள் கேட்கவும் முடியும். என்னைத் தவிர வேறு யாரும் கூற முடியாது.

 

சந்நியாசிகள் சிவபாபாவை நினைவு செய்ய முடியுமா? நிராகார இறைவனை நினைவு செய்யுங்கள் என்று அவர்கள் கூறவும் முடியாது. எப்பொழுதாவது கேட்டிருக்கிறீர்களா? அதிகம் படித்தவர்களும் கூட புரிந்து கொள்வது கிடையாது. கிருஷ்ணர் பகவான் கிடையாது என்று இப்பொழுது தந்தை புரிய வைக்கின்றார். மனிதர்கள் அவரையே பகவான் என்று கூறிக் கொண்டே இருக்கின்றனர். எவ்வளவு வித்தியாசம் ஏற்பட்டு விடுகிறது! தந்தை குழந்தைகளுக்கு அமர்ந்து புரிய வைக்கின்றார். அவர் தந்தை, ஆசிரியர், குருவாகவும் இருக்கின்றார். சிவபாபா அனைவருக்கும் அமர்ந்து புரிய வைக்கின்றார். புரிந்து கொள்ளாத காரணத்தினால் திரிமூர்த்தியில் சிவனை வைப்பதே கிடையாது. பிரம்மாவை வைக்கின்றனர், அவர் தான் பிரஜாபிதா பிரம்மா என்று கூறப்படுகின்றார். பிரஜைகளை படைக்கக் கூடியவர். ஆனால் அவரை பகவான் என்று கூறுவது கிடையாது. பகவான் பிரஜைகளை படைப்பது கிடையாது. அனைத்து ஆத்மாக்களும் பகவானின் குழந்தைகள் ஆவர். பிறகு யார் மூலமாவது பிரஜைகளை படைக்கின்றார். உங்களை தத்தெடுத்தது யார்? பிரம்மாவின் மூலம் தந்தை தத்தெடுத்திருக்கின்றார். எப்பொழுது பிராமணன் ஆவார்களோ அப்பொழுது தான் தேவதையாக ஆக முடியும். இந்த விசயங்களை ஒருபொழுதும் நீங்கள் கேள்விப்பட்டது கிடையாது. பிரஜாபிதாவிற்கும் அவசியம் பாகம் இருக்கிறது. நடிப்பு தேவை அல்லவா! இவ்வளவு பிரஜைகள் எங்கிருந்து வருவார்கள்! விகார வம்சத்தினர் களாக இருக்க முடியாது. பிராமணன் என்பது நமது பட்டப் பெயர் என்று அந்த விகார வம்சத்தினர்கள் கூறுவர். அனைவருக்கும் தனித்தனியாக பெயர்கள் உள்ளன. எப்பொழுது சிவபாபா இவரிடத்தில் பிரவேசிக்கின்றாரோ அப்பொழுது தான் இவரை பிரஜாபிதா பிரம்மா என்று கூறுகின்றோம். இது புது விசயமாகும். தந்தை தானே கூறுகின்றார் - என்னை யாரும் அறியவில்லை, சிருஷ்டி சக்கரத்தையும் அறியவில்லை. அதனால் தான் ரிஷி, முனிவர்கள் அறியவில்லை, அறியவில்லை என்று கூறிச் சென்றனர். பரமாத்மாவை மற்றும் பரமாத்மாவின் படைப்புகளை அறியவில்லை. எப்பொழுது நான் வந்து எனது அறிமுகம் கொடுக்கிறேனோ அப்பொழுது தான் அறிந்து கொள்கிறீர்கள் என்று தந்தை கூறுகின்றார். இந்த தேவதைகளுக்கு அங்கு நாம் இந்த இராஜ்யத்தை எவ்வாறு அடைந்தோம்? என்பது தெரியாது. அவர்களிடத்தில் ஞானம் இருக்கவே இருக்காது. பதவி அடைந்த பின்பு ஞானத்திற்கான அவசியம் கிடையாது. சத்கதிக்காகத் தான் ஞானம் தேவைப்படுகிறது. இவர்கள் சத்கதியை அடைந்திருக்கின்றனர். இது புரிந்து கொள்வதற்கு மிகவும் ஆழமான விசயமாகும். புத்திசாலிகள் தான் புரிந்து கொள்வர். மற்றபடி வயதான தாய்மார்களிடத்தில் அந்த அளவிற்கு புத்தி கிடையாது, நாடகப்படி ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்கென்று பாகம் கிடைத்திருக்கிறது. ஹே ஈஸ்வரனே! புத்தி கொடுங்கள் என்று அவர்கள் கேட்கமாட்டார்கள். அனைவருக்கும் ஒரே மாதிரியான புத்தியை நான் கொடுத்தால் பிறகு அனைவரும் நாராயணனாக ஆகிவிடுவர். அனைவரும் ஒருவர் மீது ஒருவர் சிம்மாசனத்தில் அமர்வார்களா என்ன? இவ்வாறு ஆக வேண்டும் என்பது இலட்சியமாக இருக்கிறது. நரனிலிருந்து நாராயணன் ஆவதற்கு அனைவரும் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். முயற்சியின் படி தான் அடைவீர்கள் அல்லவா! நான் நாராயணன் ஆவேன் என்று ஒருவேளை அனைவரும் கை உயர்த்தினால் தந்தைக்கு உள்ளுக்குள் சிரிப்பு வரும் அல்லவா! அனைவரும் ஒரே மாதிரியாக எப்படி ஆக முடியும்? வரிசைக் கிரமம் ஏற்படுகிறது அல்லவா! முதலாம் நாராயணன், இரண்டாம், மூன்றாம் என்று இருக்கிறது. எவ்வாறு முதலாம் எட்வர்ட், இரண்டாம், மூன்றாம்..... என்று இருக்கிறது அல்லவா! இது இலட்சியமாக இருக்கிறது, ஆனால் தானே புரிந்து கொள்ள முடியும் அல்லவா ! - நடத்தை இவ்வாறு இருந்தால் என்ன பதவி கிடைக்கும்? அவசியம் முயற்சி செய்ய வேண்டும். பாபா வரிசைக் கிரமமாக மலர்களை எடுத்துக் கொண்டு வருகின்றார். வரிசைக் கிரமமாக மலர்களை கொடுக்கவும் முடியும், ஆனால் இவ்வாறு செய்வது கிடையாது. மனம் உடைந்து விடுவர். பாபா அறிவார், யாரெல்லாம் நன்றாக சேவை செய்து கொண்டிருக்கின்றனர் என்பதைப் பார்க்கின்றார், அவர்கள் நல்ல மலர் ஆவர். பின்னால் வரிசைக் கிரமம் ஏற்படவே செய்கிறது. மிகப் பழையவர்களும் அமர்ந்திருக்கின்றனர், ஆனால் அவர்களை விட புதியவர்கள் மிக நல்ல மலர்களாக இருக்கின்றனர். சண்டை சச்சரவில் ஈடுபடுவது, நம்பர் ஒன் நேர்மையான மலர் என்றும், இவர் குழப்பத்தில், பொறாமை போன்றவை இவரிடம் இல்லை என்றும் கூறுவார். பலரிடத்தில் ஏதாவது குறைகள் அவசியம் இருக்கவே செய்கின்றன. சம்பூர்ணம் என்று யாரையும் கூற முடியாது. 16 கலைகள் நிறைந்தவர்களாக ஆவதற்கு அதிக முயற்சி செய்ய வேண்டும். இப்பொழுது யாரும் சம்பூர்ணம் ஆக முடியாது. இப்பொழுது நல்ல நல்ல குழந்தைகளிடத்திலும் பொறாமை அதிகமாக இருக்கிறது. குறைகள் இருக்கின்றன அல்லவா! யார் என்ன என்ன முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை தந்தை அறிவார். உலகத்தினருக்கு என்ன தெரியும்? அவர்கள் எதையும் புரிந்து கொள்வது கிடையாது. மிகச் சிலரே புரிந்து கொள்கின்றனர். ஏழைகள் உடனேயே புரிந்து கொள்கின்றனர். எல்லையற்ற தந்தை கற்பிப்பதற்காக வந்திருக்கின்றார். அந்த தந்தையை நினைவு செய்வதன் மூலம் நமது பாவங்கள் அழிந்து விடும். நாம் தந்தையிடத்தில் வந்திருக்கிறோம், பாபாவிடமிருந்து புது உலகிற்கான ஆஸ்தி அவசியம் கிடைக்கும். வரிசைக்கிரமம் அவசியம் ஏற்படுகிறது - 100 லிருந்து முதல் நம்பர் வரை ஏற்படவே செய்கிறது. ஆனால் தந்தையை அறிந்து கொண்டு விட்டனர், சிறிது கேட்டாலும் சொர்க்கத்திற்கு அவசியம் வருவர். 21 பிறவிகளுக்கு சொர்க்கத்திற்கு வருவது குறைந்த விசயமா என்ன! யாராவது இறந்து விட்டால் 21 பிறவிகளுக்காக சொர்க்கத்திற்கு சென்று விட்டார் என்று கூறுவது கிடையாது. சொர்க்கம் எங்கு இருக்கிறது! எவ்வளவு புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர்! பெரிய பெரிய நல்ல மனிதர்களும் இன்னார் சொர்க்கம் சென்று விட்டதாக கூறுகின்றனர். சொர்க்கம் என்று எதைக் கூறுகின்றனர்? எந்த பொருளையும் புரிந்து கொள்வது கிடையாது. இதை நீங்கள் மட்டுமே அறிவீர்கள். நீங்களும் மனிதர்கள் தான், ஆனால் நீங்கள் பிராமணர்களாக ஆகியிருக்கிறீர்கள். தன்னை பிராமணன் என்று கூறிக் கொள்கிறீர்கள். பிராமணர்களாகிய உங்களுக்கு ஒரே ஒரு பாப்தாதா இருக்கின்றார். ஆக நீங்கள் சந்நியாசி களிடத்திலும் கேட்க முடியும் - தேகம் உட்பட தேகத்தின் அனைத்து தர்மங்களை விட்டு விட்டு என்னை நினைவு செய்யுங்கள் என்று கூறுவது கிருஷ்ணரா? நீங்கள் கிருஷ்ணரை நினைவு செய்கிறீர்களா என்ன? ஒருபொழுதும் ஆம் என்று கூறமாட்டார்கள். அங்கேயே நிரூபணம் ஆகிவிட வேண்டும். ஆனால் (சேவைக்கு) செல்லக் கூடிய அபலைகளுக்கு என்ன தெரியும்! அவர்கள் தங்களை பின்பற்றுபவர் களிடத்தில் கோபப்பட்டு விடுகின்றனர். துர்வாசர் என்ற பெயரும் இருக்கிறது அல்லவா! அவரிடத்தில் அகங்காரம் அதிகமாக இருக்கும். பின்பற்றுபவர்களும் பலர் இருப்பர். பக்தியின் இராஜ்யம் அல்லவா! அவரிடத்தில் எதையும் கேட்கும் தைரியம் யாரிடத்திலும் கிடையாது. இல்லையெனில் நீங்கள் சிவபாபாவை பூஜை செய்கிறீர்களா? பகவான் என்று யாரைக் கூறுகிறீர்கள்? கல், முள்ளில் பகவான் இருக்கிறாரா? என்று நீங்கள் கேட்க முடியும். நாளடைவில் இந்த அனைத்து விசயங்களையும் புரிந்து கொள்வர். இப்பொழுது எவ்வளவு போதையுடன் இருக்கின்றனர்! இருப்பதோ பூஜாரிகளாக! பூஜைக்குரியவர்கள் என்று கூறமாட்டோம்.

 

என்னை மிகச் சிலரே அறிந்திருக்கின்றனர் என்று தந்தை கூறுகின்றார். நான் யார்? எப்படிப்பட்டவன்? என்பதை குழந்தைகளாகிய உங்களிலும் மிகச் சிலரே மிகச் சரியாக புரிந்திருக்கின்றனர். அவர்களுக்கு உள்ளுக்குள் அதிக குஷியிருக்கும். பாபா தான் நமக்கு சொர்க்கத்தின் இராஜ்யம் கொடுக்கின்றார் என்பதைப் புரிந்திருக்கிறீர்கள் அல்லவா! குபேரனின் பொக்கிஷம் கிடைக்கிறது. அல்லா, அலாவுதினின் விளையாட்டும் காண்பிக்கின்றனர் அல்லவா! தட்டுவதன் மூலம் பொக்கிஷம் வெளிப்பட்டு விடுகிறது. பல விளையாட்டுக்களை காண்பிக்கின்றனர். இறை நண்பனாகிய சக்கரவர்த்தி (குதா தோஸ்த்) என்ன செய்தார்? அதற்கும் கதை இருக்கிறது. ஒரு வருட இராஜ்யம் கொடுத்து விட்டு பிறகு நதிக்கு அப்பால் அனுப்பி வைக்கப்படுவர். இது போன்ற பல கதைகள் உள்ளன. இப்பொழுது தந்தை புரிய வைக்கின்றார் - குழந்தைகளாகிய உங்களுக்கு இறைவன் (குதா) நண்பனாக இருக்கின்றார். இவருக்குள் பிரவேசம் செய்து உங்களுடன் சாப்பிடுகின்றார், குடிக்கின்றார், விளையாடவும் செய்கின்றார். சிவபாபாவின் மற்றும் பிரம்மா பாபாவின் இரதம் ஒன்று தான். ஆக அவசியம் சிவபாபாவும் விளையாட (செயல்பட) முடியும் அல்லவா! தந்தையை நினைவு செய்து விளையாடும் (செயலாற்றும்) பொழுது இருவரும் இவருக்குள் இருக்கின்றனர். தந்தை (பாப்) மற்றும் மூத்த சகோதரர் (தாதா) இருவரும் இருக்கின்றனர் அல்லவா! ஆனால் யாரும் புரிந்து கொள்வது கிடையாது. இரதத்தில் வந்ததாக கூறுகின்றனர், இதையே அவர்கள் குதிரை வண்டியின் இரதமாக உருவாக்கி விட்டனர். கிருஷ்ணருக்குள் சிவபாபா அமர்ந்து ஞானம் கொடுக்கின்றார் என்றும் கூறுவது கிடையாது. அவர்கள் கிருஷ்ண பகவானின் மகாவாக்கியம் என்று கூறிவிட்டனர். பிரம்ம பகவானின் மகாவாக்கியம் என்று கூறுவது கிடையாது. இவர் இரதம் ஆவார். சிவ பகவானின் மகாவாக்கியமாகும். தந்தை வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு தனது மற்றும் படைப்பின் முதல், இடை, கடையின் அறிமுகம், கால அளவை கூறுகின்றார். இதை யாரும் அறிந்திருக்கவில்லை. யார் புத்திசாலிகளாக இருக்கின்றார்களோ அவர்கள் புத்திக்கு வேலை கொடுப்பர். சந்நியாசிகள் சந்நியாசம் செய்ய வேண்டும். நீங்களும் சரீர சகிதமாக அனைத்தையும் சந்நியாசம் செய்கிறீர்கள். இது பழைய சரீரம் என்பதை அறிவீர்கள். நாம் இப்பொழுது புது உலகிற்கு செல்ல வேண்டும். ஆத்மாக்களாகிய நாம் இங்கு இருக்கக் கூடியவர்கள் கிடையாது. இங்கு நடிப்பு நடிப்பதற்காக வந்திருக்கிறோம். நாம் பரந்தாம வாசிகள். அங்கு நிராகார மரம் எப்படி இருக்கும்? என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அனைத்து ஆத்மாக்களும் அங்கு இருக்கின்றன, இது அழிவற்ற நாடகம், ஏற்கெனவே உருவாக்கப்பட்டதாகும். எவ்வளவு கோடிக்கணக்கான ஜீவாத்மாக்கள் இருக்கின்றனர். இவ்வளவு பேர் எங்கு இருந்தனர்? நிராகார உலகில். மற்றபடி இந்த நட்சத்திரங்கள் ஆத்மாக்கள் அல்ல. மனிதர்கள் இந்த நட்சத்திரங்களையும் தேவதைகள் என்று கூறி விட்டனர். ஆனால் அது எந்த தேவதையாகவும் கிடையாது. ஞான சூரியன் என்று நாம் சிவபாபாவைக் கூறுகின்றோம். பிறகு அவர்களை தேவதை என்று கூறவே முடியாது. சாஸ்திரங்களில் என்ன என்ன விசயங்களை எழுதி வைத்து விட்டனர். இவையனைத்தும் பக்தி மார்க்கத்தின் சடங்குகளாகும். இதன் மூலம் நீங்கள் கீழே தான் விழுந்து வந்தீர்கள். 84 பிறவிகள் எடுக்கிறீர்கள் எனில் அவசியம் கீழே இறங்குவீர்கள் அல்லவா! இது இப்பொழுது இரும்பு யுகமாகும். சத்யுகம் தங்க யுகம் என்று கூறப்படுகிறது. அங்கு யார் இருப்பார்கள்? தேவதைகள். அவர்கள் எங்கு சென்றனர்? என்பது யாருக்கும் தெரியாது. மறுபிறப்பு எடுப்பர் என்பதை புரிந்தும் இருக்கின்றனர். மறுபிறப்பு எடுத்து எடுத்து தேவதையிலிருந்து மாறி இந்துவாக ஆகிவிட்டனர் என்று தந்தை புரிய வைத்திருக்கின்றார். பதீதம் ஆகியிருக்கின்றனர் அல்லவா! மற்ற எந்த தர்மத்தினரும் மாறுவது கிடையாது. இவர்களது தர்மத்தில் மட்டும் ஏன் மாறுதல் ஏற்படுகிறது? என்பது யாருக்கும் தெரியாது. தந்தை கூறுகின்றார் - தர்மம் கீழானதாக ஆகிவிட்டது, கர்மமும் கீழானதாக ஆகிவிட்டது. தேவி தேவதைகளாக இருந்த பொழுது தூய்மையாக இருந்தனர். பிறகு இராவண இராஜ்யத்தில் நீங்கள் அசுத்தமாக ஆகிவீட்டீர்கள். ஆகையால் தேவி தேவதை என்று கூறிக் கொள்வது கிடையாது. ஆக இந்து என்ற பெயர் வந்து விட்டது. தேவி தேவதா தர்மத்தை கிருஷ்ண பகவான் ஸ்தாபனை செய்யவில்லை. கண்டிப்பாக சிவபாபா வந்து தான் ஸ்தாபனை செய்திருக்க வேண்டும். சிவஜெயந்தி, சிவராத்திரியும் கொண்டாடப்படுகிறது. ஆனால் அவர் வந்து என்ன செய்தார்? என்பது யாருக்கும் தெரியாது. சிவ புராணம் என்றும் ஒன்று இருக்கிறது. உண்மையில் சிவனினுடையது ஒரே ஒரு கீதையாகும். அதை சிவபாபா தான் கூறியிருக்கின்றார், வேறு எந்த சாஸ்திரத்தையும் கூறவில்லை. நீங்கள் எந்த இம்சையும் செய்வது கிடையாது. உங்களுடையது எந்த சாஸ்திரமாகவும் உருவாக்கப்படுவது கிடையாது. நீங்கள் புது உலகிற்கு சென்று விடுகிறீர்கள். சத்யுகத்தில் எந்த சாஸ்திரமும், கீதை போன்றவைகளும் இருக்காது. அங்கு யார் படிப்பது? இந்த வேத சாஸ்திரங்கள் பரம்பரையாக நடைபெற்று வருவதாக அவர்கள் கூறி விடுகின்றனர். அவர்களுக்கு எதுவும் தெரியாது. சொர்க்கத்தில் எந்த சாஸ்திரங்களும் இருக்காது. தந்தை தேவதைகளாக ஆக்கிவிடுகின்றார், அனைவருக்கும் சத்கதி ஏற்பட்டு விடுகிறது, பிறகு சாஸ்திரங்கள் படிப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது! அங்கு சாஸ்திரங்கள் இருக்காது. இப்பொழுது தந்தை உங்களுக்கு ஞானம் என்ற சாவி கொடுத்திருக்கின்றார். இதன் மூலம் புத்தி பூட்டு திறக்கப்பட்டு விட்டது. முதலில் பூட்டு முற்றிலுமாக பூட்டப்பட்டு இருந்தது, எதையும் புரிந்து கொள்ளாமல் இருந்தோம். நல்லது.

 

இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) யாரிடத்திலும் பொறாமை படக் கூடாது. குறைகளை நீக்கி சம்பூர்ணம் ஆவதற்கான முயற்சி செய்ய வேண்டும். படிப்பின் மூலம் உயர்ந்த பதவியடைய வேண்டும்.

 

2) சரீரம் உட்பட அனைத்தையும் சந்நியாசம் செய்ய வேண்டும். எந்த வகையான இம்சையும் செய்யக் கூடாது. அகங்காரம் இருக்கக் கூடாது.

 

வரதானம்:

என்னுடையது உன்னுடையது என்பதில் மாற்றம் செய்து கவலையற்று இருக்கக்கூடிய குஷியின் பொக்கிஷத்தால் நிரம்பியவர் ஆகுக !

 

எந்த குழந்தைகள் அனைத்தும் உன்னுடையது என்று ஆகினார்களோ அவர்கள் கவலையற்று இருப்பார்கள். என்னுடையது என எதுவும் இல்லை, அனைத்தும் உன்னுடையது... இப்படி மாற்றம் செய்யும் போது கவலையற்றவர்களாக ஆகிவிடுகிறீர்கள். வாழ்க்கையில் அனைவருமே கவலையற்றவர்களாக ஆக விரும்புகின்றனர். எங்கே கவலை இல்லையோ அங்கே எப்போதும் குஷி இருக்கும். ஆக உன்னுடையது என சொல்வதன் மூலம் கவலையற்றவராக ஆகுவதன் மூலம் குஷியின் பொக்கிஷத்தால் நிரம்பியவர் ஆகிவிடுகிறீர்கள். கவலையற்ற மகாராஜாக்களாகிய உங்களிடம் கணக்கற்ற, குறையாத அழிவற்ற பொக்கிஷங்கள் இருக்கின்றன, அவை சத்யுகத்தில் கூட இருப்பதில்லை.

 

சுலோகன்:

பொக்கிஷங்களை சேவையில் ஈடுபடுத்துவது என்றால் சேமிப்புக் கணக்கை அதிகரிப்பது ஆகும்.

 

ஓம்சாந்தி