17.01.2019    காலை முரளி            ஓம் சாந்தி         பாப்தாதா,   மதுபன்


 

இனிமையான குழந்தைகளே! நமக்கு எப்படிப்பட்ட இனிமையான பாபா கிடைத்திருக்கிறார்.அவருக்கு எந்தவிதமான ஆசையும் இல்லை மற்றும் எவ்வளவு பெரிய வள்ளலாகவும் இருக்கின்றார், வாங்க வேண்டும் என்ற ஆசை கொஞ்சம் கூட இல்லை, என்று நீங்கள் அதிசயப்பட வேண்டும்.

 

கேள்வி:

பாபாவின் அதிசயமான நடிப்பு என்ன? 100 சதவீதம் ஆசையற்ற பாபா எந்த விருப்பத்துடன் சிருஷ்டிக்கு வந்திருக்கிறார்?

 

பதில்:-

பாபாவின் அதிசயமான நடிப்பு படிப்பிப்பதாகும். அவர் சேவைக்காகவே வந்திருக்கின்றார். வளர்க்கின்றார். இனிமையான குழந்தைகளே! இதைச் செய்யுங்கள் என்று செல்லம் கொடுத்துக் கூறுகின்றார். ஞானம் சொல்கின்றார், எதையும் பெறுவதில்லை. 100 சதவீதம் ஆசையற்ற பாபாவிற்கு, நான் சென்று குழந்தை களுக்கு வழி சொல்ல வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது.  சிருஷ்டியின் முதல்-இடை-கடைசியின் செய்தியைச் சொல்ல வேண்டும். குழந்தைகளை குணமிக்கவர்களாக்க வேண்டும்...... என்பது தான் பாபாவின் ஆசையாகும்.

 

ஓம் சாந்தி.

இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளுக்கு எதையும் பெற்றுக் கொள்ளாத, எதையும் உண்ணாத ஆன்மீகத் தந்தை கிடைத்திருக்கிறார். எதையும் குடிப்பதும் இல்லை. ஆக அவருக்கு எந்த ஆசையோ அல்லது எதிர்பார்ப்போ கிடையாது, மனிதர்களுக்கு எதாவது ஒரு ஆசை கண்டிப்பாக இருக்கிறது. செல்வந்தர்களாக ஆக வேண்டும், இன்னாராக ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அவருக்கு எந்த ஆசையும் கிடையாது, அவர் எதையும் அனுபவிப்பவர் கிடையாது. ஒரு சாது சொன்னார் நான் எதையும் சாப்பிடுவதோ குடிப்பதோ கிடையாது என்று, நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். இது காப்பியடிப்பதாகும். முழு உலகத்திலும் ஒரு பாபா தான் எதையும் பெறுவதோ, செய்வதோ கிடையாது. எனவே குழந்தைகள் நாம் யாருடைய குழந்தைகள் என்பதை சிந்திக்க வேண்டும். பாபா எப்படி வந்து இவருக்குள் பிரவேசிக்கின்றார். தனக்கென்று எந்த ஆசையும் இல்லை. அவர் மறைமுகமாக இருக்கின்றார். அவருடைய வரலாற்றை குழந்தை களாகிய நீங்கள் தான் தெரிந்துள்ளீர்கள். உங்களில் கூட குறைவானவர்களே முழுமையான விதத்தில் புரிந்து கொள்கிறீர்கள். நமக்கு எதையும் சாப்பிடாத, எதையும் குடிக்காத, எதையும் பெற்றுக் கொள்ளாத தந்தை கிடைத்திருக்கிறார் என்பது புத்தியில் வர வேண்டும். அவருக்கு எதுவும் அவசியமில்லை. இப்படி யாரும் இருக்க முடியாது. இப்படி ஒரேயொரு நிராகார உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் தான் இருக்கின்றார் என்று பாடப்பட்டுள்ளது. அவரைத் தான் அனைவரும் நினைவு செய்கிறார்கள். அவர் உங்களுடைய எதையும் அனுபவிக்காத தந்தையாகவும், எதையும் அனுபவிக்காத டீச்சராகவும் இருக்கின்றார், எதையும் அனுபவிக்காத சத்குருவாகவும் இருக்கின்றார். எதையும் பெற்றுக் கொள்வதில்லை, பெற்றுக் கொண்டு அவர் என்ன செய்வார்! இவரும் அதிசயமான தந்தையாக இருக்கின்றார். தனக்கென்று எந்த ஆசையும் இல்லை. இப்படிப்பட்ட மனிதன் யாரும் இல்லை. மனிதனுக்கு உணவு, உடை போன்ற அனைத்தும் வேண்டும். எனக்கு எதுவும் வேண்டாம். வந்து தூய்மையற்றவர்களை தூய்மையாக்குங்கள் என்று தான் என்னை அழைக்கிறார்கள். நான் நிராகாரமான வனாக இருக்கின்றேன், நான் எதையும் வாங்குவதில்லை. எனக்கு என்னுடைய சூட்சும சரீரமும் இல்லை. நான் இவருக்குள் மட்டும் பிரவேசிக்கின்றேன். மற்றபடி சாப்பிடுவது, குடிப்பது இவருடைய ஆத்மாவாகும். என்னுடைய ஆத்மாவிற்கு எந்த ஆசையும் இல்லை. நான் சேவைக்காக மட்டுமே வருகின்றேன். யோசிக்க வேண்டியிருக்கிறது, எப்படிப்பட்ட அதிசயமான விளையாட்டாக இருக்கிறது! ஒரு தந்தை அனைவருக்கும் பிடித்தமானவராக இருக்கின்றார். அவருக்கு கொஞ்சம் கூட ஆசை கிடையாது. வந்து படிப்பிக்கின்றார், வளர்க்கின்றார், இனிமையான குழந்தைகளே இதைச் செய்யுங்கள் என்று, செல்லம் கொஞ்சுகின்றார். ஞானத்தைக் கூறுகின்றார், எதையும் வாங்குவதில்லை. செய்பவர் செய்விப்பவர் பாபாவே ஆவார். எதையாவது சிவபாபாவிற்குக் கொடுத்தீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவர் என்ன செய்வார்? டோலி வாங்கி சாப்பிடுவாரா என்ன? சிவபாபாவிற்கு சரீரமே கிடையாது. எனவே எப்படி வாங்குவார்? மேலும் எவ்வளவு சேவை செய்கிறார் பாருங்கள்! அனைவருக்கும் நல்ல நல்ல வழிகளைச் சொல்லி மலர்களாக மாற்றுகின்றார். குழந்தைகள் அதிசயப்பட வேண்டும். பாபா வள்ளல் ஆவார். அதுவும் எந்த ஆசையும் இல்லாத பெரிய வள்ளல். பிரம்மாவிற்கு இவ்வளவு குழந்தைகளையும் பராமரிக்க வேண்டும், உணவளிக்க வேண்டும், என்ற கவலை இருக்கிறது, வருகின்ற பணம் சிவபாபாவிற்காகவே வருகிறது. நான் அனைத்தையும் சுவாஹா செய்து விட்டேன். பாபாவின் ஸ்ரீமத்படி நடந்து தன்னுடைய அனைத்தையும் பயன்படுத்தி எதிர்காலத்தை உருவாக்குகின்றேன். பாபாவோ 100 சதவீதம் ஆசையற்றவராக இருக்கின்றார். சென்று அனைவருக்கும் வழி சொல்ல வேண்டும் என்ற கவலை மட்டுமே ஆகும். சிருஷ்டியின் முதல்-இடை-கடைசியின் செய்தியைச் சொல்ல வேண்டும் வேறு எதுவும் தெரியாது. குழந்தைகளாகிய நீங்கள் தான் தெரிந்துள்ளீர்கள். பாபா டீச்சராக இருந்து படிப்பிக்கின்றார். சம்பளம் எதுவும் வாங்குவதில்லை. நீங்கள் சிவபாபாவின் பெயரால் வாங்குகிறீர்கள். அங்கே அதற்கு பலன் கிடைக்கிறது. நான் நரனிலிருந்து நாராயணனாக ஆக வேண்டும் என்ற ஆசை பாபாவிற்கு இருக்கிறதா என்ன? பாபா நாடகத்தின்படி படிப்பிக்கின்றார். நான் உயர்ந்ததிலும் உயர்ந்த சிம்மாசனதாரியாக ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்பது கிடையாது. அனைத்து ஆதாரமும் படிப்பின் மீதும், தெய்வீக குணங்களின் மீதும் இருக்கிறது. பிறகு மற்றவர்களுக்கும் படிப்பிக்க வேண்டும். கல்பத்திற்கு முன்னால் இவருடைய (பிரம்மாவின்) நடிப்பு என்ன நடந்ததோ, அதை பாபா சாட்சியாக இருந்து பார்க்கின்றார். நீங்களும் சாட்சியாக இருந்து பாருங்கள் என்று பாபா குழந்தைகளுக்கும் கூறுகின்றார். நாம் படிக்கிறோமா இல்லையா என்று தங்களையும் கூட பாருங்கள். ஸ்ரீமத்படி நடக்கிறோமா இல்லையா? மற்றவர்களை தங்களுக்குச் சமமாக மாற்றும் சேவையை செய்கிறோமா இல்லையா. பாபா இவருடைய வாயைக் கடனாக பெற்று பேசுகின்றார். ஆத்மா உயிரோட்ட முடையதாகும். பிணத்தில் இருந்து கொண்டு பேச முடியாது. கண்டிப்பாக உயிருள்ள சரீரத்தில் தான் வர முடியும். எனவே பாபா எவ்வளவு ஆசையற்றவராக இருக்கின்றார்! எந்த ஆசையும் இல்லை. குழந்தை வளர்ந்து விட்டால் எனக்கு சாப்பாடு போடுவான் என்று லௌகீக தந்தை நினைப்பார். இவருக்கு எந்த ஆசையும் இல்லை. எனக்கு நாடகத்தில் நடிப்பு இப்படி தான் இருக்கிறது என்று தெரிந்திருக்கிறார், வந்து படிப்பிக்க மட்டும் வேண்டும். இதுவும் பதிவாகியிருக்கிறது. மனிதர்கள் நாடகத்தை முற்றிலும் தெரிந்திருக்கவில்லை.

 

நமக்கு பாபா தான் படிப்பிக்கின்றார் என்ற நம்பிக்கை குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்கிறது. இந்த பிரம்மாவும் கூட படிக்கின்றார். கண்டிப்பாக இவர் அனைவரையும் விட நன்றாக படிப்பார். இவர் கூட சிவபாபாவிற்கு நல்ல உதவியாளராக இருக்கின்றார். என்னிடத்தில் எந்த செல்வமும் இல்லை. குழந்தைகள் தான் செல்வத்தை தருகிறார்கள், பெறுகிறார்கள். இரண்டு பிடி கொடுக்கிறார்கள் மற்றும் பிரதி பலனாக எதிர்காலத்தில் பெறுகிறார்கள். சிலரிடத்தில் எதுவும் இல்லையென்றால் எதையும் கொடுப்பதில்லை. மற்றபடி நன்றாக படிக்கிறார்கள் என்றால் எதிர்காலத்தில் நல்ல பதவி அடைகிறார்கள், இப்படி இருப்பவர்களும் குறைவானவர்களே, அவர்களுக்கு நாம் புதிய உலகத்திற்காக படிக்கின்றோம் என்பது நினைவிருக்கிறது. இது நினைவிருந்தால் கூட மன்மனாபவ ஆகும். ஆனால் நிறைய பேர் உலகாய விஷயங்களில் நேரத்தை வீணாக்குகிறார்கள், பாபா என்ன படிப்பிக்கின்றார், எப்படி படிப்பிக்கின்றார், எந்தளவிற்கு உயர்ந்த பதவியை அடைய வேண்டும், இவையனைத்தும் மறந்து விடுகிறது. தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள். யார் பெரிய தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்களோ, அவர்கள் ஒருபோதும் தங்களுடைய நேரத்தை வீணாக்குவதில்லை. நன்றாக படிப்பார்கள், ஸ்ரீமத்படி நடப்பார்கள். ஸ்ரீமத்படி நடக்க வேண்டும் அல்லவா! இல்லையெனில் நீங்கள் கட்டளைப்படி நடக்காதவர்கள் என்று பாபா கூறுகின்றார். பாபாவை நினைவு செய்யுங்கள் என்று ஸ்ரீமத் கொடுக்கின்றேன் நீங்கள் மறந்து விடுகிறீர்களே! இதை பலஹீனம் என்று தான் சொல்ல முடியும். மாயை ஒரேயடியாக மூக்கைப் பிடித்து, ஒரு குத்துவிட்டு தலைமீது அமர்ந்து விடுகிறது. இது யுத்த மைதானம் அல்லவா! நல்ல நல்ல குழந்தைகள் மீது மாயை வெற்றி அடைந்து விடுகிறது. பிறகு யாருடைய பெயர் கெடுகிறது? சிவபாபாவினுடைய பெயர் கெட்டுப் போகிறது. குருவை நிந்தனை செய்பவர்கள் உயர்ந்த பதவி அடைய முடியாது என்று பாடப்பட்டுள்ளது. இப்படி மாயையிடம் தோல்வியுற்றவர்கள் எப்படி உயர்ந்த பதவி அடைய முடியும். நாம் எப்படி முயற்சி செய்து பாபாவிடமிருந்து ஆஸ்தி அடைவது என்று தங்களுடைய நன்மைக்காக புத்தியை ஓட்ட வேண்டும். நல்ல - நல்ல மகாரதிகளைப்போல் ஆகி அனைவருக்கும் வழியைச் சொல்ல வேண்டும். பாபா சேவைக்கான யுக்தியை மிகவும் சகஜமாக கூறுகின்றார். நீங்கள் என்னை அழைத்து வந்தீர்கள், இப்போது நான் கூறுகின்றேன், என்னை நினைவு செய்தீர்கள் என்றால் தூய்மையாக ஆகி விடுவீர்கள் என்று பாபா கூறுகின்றார். தூய்மையான உலகத்தின் சித்திரம் இருக்கிறது அல்லவா! இது முக்கியமானதாகும். இங்கே குறிக்கோள் வைக்கப்படுகிறது. டாக்டராக ஆக வேண்டும் என்றால் டாக்டரை நினைவு செய்ய வேண்டும் என்பது கிடையாது. வக்கீலாக ஆக வேண்டும் என்றால் வக்கீலை நினைவு செய்ய வேண்டும் என்பது கிடையாது. பாபா கூறுகின்றார், என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். நான் உங்களுடைய மன ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக் கூடியவனாக இருக்கின்றேன். நீங்கள் என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். மாயை உங்களை எவ்வளவு தான் துன்புறுத்தினாலும், யுத்தம் தான் அல்லவா! உடனே வெற்றி அடைந்து விட முடியுமா என்ன! இதுவரை ஒருவர் கூட மாயையின் மீது வெற்றி அடையவில்லை, வெற்றி அடைந்து விட்டால் பிறகு உலகத்தை வென்றவர்களாக இருக்க வேண்டும். நான் அடிமை, உனக்கு நான் அடிமை........ என்று பாடுகிறார்கள். இங்கே மாயையை அடிமையாக்க வேண்டும். அங்கே மாயை ஒருபோதும் துக்கம் கொடுக்காது. இன்றைக்கு உலகமே மிகவும் அழுக்காக இருக்கிறது. ஒருவர் மற்றவருக்கு துக்கம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். எவ்வளவு இனிமையான பாபா! அவருக்கு தனக்கென்று எந்த ஆசையும் இல்லை. நாங்கள் சிவபாபாவை ஏற்றுக் கொள்கிறோம், பிரம்மா பாபாவை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொல்கிறார்கள், இப்படிப்பட்ட பாபாவை நினைவு செய்வதில்லை! ஆனால் இவர்கள் இருவரும் சேர்ந்தே இருக்கிறார்கள், தரகர் இல்லாமல் வியாபாரம் நடக்காது. பாபாவின் இரதம் ஆவார், இவருடைய பெயரே பாக்கியசாலி ரதம் ஆகும். அனைவரிலும் நம்பர் ஒன் உயர்ந்தவர் இவர் என்பதையும் நீங்கள் தெரிந்துள்ளீர்கள். வகுப்பில் மாணவர் தலைவனுக்கும் மரியாதை இருக்கிறது. மதிப்பு வைக்கிறார்கள். நம்பர் ஒன் செல்லமான குழந்தையும் இவர் தான் அல்லவா! அங்கேயும் கூட இராஜாக்கள் அனைவரும் இவருக்கு (ஸ்ரீ நாராயணனுக்கு) மதிப்பு வைக்க வேண்டும். இதைப் புரிந்து கொண்டால் தான் மதிப்பு வைக்க புத்தி வரும். இங்கே மதிப்பு வைக்கக் கற்றுக் கொண்டால் தான் அங்கேயும் வைப்பீர்கள். இல்லையென்றால் என்ன கிடைக்கும்? சிவபாபாவையும் கூட நினைவு செய்ய முடியாது. நினைவின் மூலம் தான் உங்களுடைய படகு அக்கரை சேருகிறது என்று பாபா கூறுகின்றார். எல்லையற்ற இராஜ்யத்தைக் கொடுக்கின்றார். அப்படிப்பட்ட பாபாவை எந்த அளவு நினைவு செய்ய வேண்டும்! உள்ளுக்குள் எவ்வளவு அன்பு இருக்க வேண்டும்! இவருக்கு (பிரம்மாவிற்கு) பாபாவிடம் எவ்வளவு அன்பு இருக்கிறது பாருங்கள்! அன்பு இருக்கிறது ஆகையினால் தான் தங்கப்பாத்திரமாக ஆனார், யாருடைய பாத்திரம் தங்கமாக இருக்கிறதோ அவர்களுடைய நடத்தை மிகவும் முதல்தரமானதாக இருக்கும். நாடகத்தின்படி இராஜ்யம் ஸ்தாபனை ஆக வேண்டும். அதில் எல்லா விதமானவர்களும் வேண்டும்.

 

குழந்தைகளே! உங்களுக்கு ஒருபோதும் கோபம் வரக்கூடாது என்று பாபா புரிய வைக்கின்றார். ஒருவேளை நாம் சேவை செய்யவில்லை என்றால் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று புரிந்து கொள்ள வேண்டும். சிவபாபாவின் யக்ஞத்தின் சேவையை யாராவது செய்யவில்லை என்றால் என்ன கிடைக்கும். சேவாதாரிகள் தான் உயர்ந்த பதவி அடைவார்கள். தங்களுக்கு நன்மை செய்வதற்கு ஆர்வம் வைக்க வேண்டும். செய்யவில்லை என்றால் பதவியை குறைத்துக் கொள்கிறீர்கள். மாணவர்கள் நன்றாகப் படிக்கிறார்கள் என்றால் டீச்சரும் குஷி அடைவார், இவர்கள் நம்முடைய பெயரை காப்பாற்றுவார்கள் என்று புரிந்து கொள்வார்கள். இவர்களால் நமக்கு பரிசு கிடைக்கும். தந்தை, டீச்சர் போன்ற அனைவரும் குஷியடைவார்கள். நல்ல சொல்படி கேட்கும் குழந்தைகள் மீது தாய் தந்தையரும் பலியாகி விடுகிறார்கள், யார் மிகவும் நன்றாக சேவை செய்கிறார்களோ, அதைக் கேட்டு பாபாவும் மகிழ்ச்சி அடைகிறார். யார் நிறைய பேருக்கு சேவை செய்கிறார்களோ, அவர்களுக்கு கண்டிப்பாக புகழ் ஏற்படும். அவர்கள் உயர்ந்த பதவியும் அடைய முடியும். இரவும் பகலும் அவர்களுக்கு சேவையைப் பற்றிய கவலை தான் இருக்கிறது. சாப்பாட்டைப் பற்றிய கவலை கொள்வதில்லை. புரிய வைத்து புரிய வைத்து தொண்டை கட்டிக் கொள்கிறது. அப்படிப்பட்ட செல்ல, சேவாதாரி குழந்தைகள் தான் உயர்ந்த பதவி அடைய வேண்டும். இது 21 பிறவிகளின் விஷயமாகும், அதுவும் கல்பம் கல்பத்திற்குமாகும். எப்போது முடிவு தெரியுமோ அப்போது எவ்வளவு சேவை செய்துள்ளார்கள் என்பது புரியும். எவ்வளவு பேருக்கு வழி சொல்லியிருக்கிறார்கள். குணங்களையும் கூட மாற்றுவது அவசியமாகும். மகாரதி, குதிரைப்படை, காலாட்படை என்று பெயர் இருக்கிறது அல்லவா! சேவை செய்யவில்லை என்றால் நாம் காலாட்படை என்று புரிந்து கொள்ள வேண்டும். நாம் செல்வத்தினால் உதவி செய்திருக்கிறோம், ஆகையினால் நம்முடைய பதவி உயர்ந்ததாக இருக்கும் என்று யாரும் புரிந்து கொள்ளக் கூடாது. இது முற்றிலும் தவறாகும். அனைத்தும் சேவை மற்றும் படிப்பில் தான் ஆதாரப்பட்டிருக்கிறது. குழந்தைகளே! படித்து உயர்ந்த பதவி அடைய வேண்டும் என்று பாபா மிகவும் நல்ல விதத்தில் புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார். கல்பம்-கல்பத்திற்கும் தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாதீர்கள். யார் தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், என்று இவர்களுக்குத் தெரியவில்லை இதை பாபா பார்த்துக் கொண்டிருக்கிறார், நாம் பணத்தை கொடுத்திருக்கிறோம் ஆகையினால் மாலையில் அருகாமையில் வருவோம் என்று குஷி ஆகி விடுகிறார்கள். பணம் கொடுத்திருக்கலாம் ஆனால் ஞானத்தை தாரணை செய்யவில்லை, யோகத்தில் இருக்கவில்லை என்றால் எந்த காரியத்திற்குப் பயன்படுவார்கள்? இரக்கப்படவில்லை என்றால் பாபாவை எங்கே பின்பற்றுகிறார்கள்? பாபா குழந்தைகளை மலர்களாக்கவே வந்துள்ளார். யார் நிறைய பேரை மலர்களாக மாற்றுவார்களோ அவர்களுக்கு பாபாவும் பலியாகி விடுவார். ஸ்தூல சேவைகளும் நிறைய இருக்கின்றன. பாபா பண்டாரா (சமையல் துறை) நிர்வகிப்பவரை நிறைய மகிமை பாடுவது போலாகும், அவர்களுக்கு நிறைய பேருடைய ஆசீர்வாதம் கிடைக்கிறது. யார் எவ்வளவு சேவை செய்கிறார்களோ, அவர்கள் தங்களுக்குத் தான் நன்மை செய்கிறார்கள், தங்களுடைய எலும்பை (கடின உழைப்பை) சேவைக்குக் கொடுக் கிறார்கள். தங்களுக்குத் தான் வருமானத்தை சம்பாதிக்கிறார்கள். மிகவும் அன்போடு சேவை செய்கிறார்கள். யார் பிரச்சனை செய்கிறார்களோ, அவர்கள் தங்களுடைய அதிர்ஷ்டத்தை கெடுத்துக் கொள்கிறார்கள், யாரிடத்தில் பேராசை இருக்குமோ அவர்களை அது துன்புறுத்தும். நீங்கள் அனைவரும் வானப்பிரஸ்திகளாவீர்கள், அனைவரும் சப்தத்திலிருந்து விடுபட்டுச் செல்ல வேண்டும். முழு நாளிலும் நாம் எவ்வளவு சேவை செய்கிறோம் என்று தங்களைத் தாங்களே கேட்க வேண்டும். நிறைய குழந்தைகளுக்கு சேவை இல்லாமல் சுகம் கிடைப்பதில்லை. சிலருக்கு புத்தியையோ அல்லது படிப்பின் மீதோ கிரகச்சாரம் பிடித்துக் கொள்கிறது. பாபா அனைவருக்கும் ஒரேமாதிரி தான் படிப்பிக்கின்றார், சிலருடைய புத்தி எப்படி இருக்கிறது, சிலருடைய புத்தி வேறு எப்படியோ இருக்கிறது. இருந்தாலும் முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால் கல்பம் கல்பத்திற்கும் பதவி அப்படி ஆகி விடும். கடைசியில் முடிவு தெரியும்போது அனைத்தையும் காட்சியாக பார்ப்பீர்கள். காட்சியைப் பார்த்து விட்டு பிறகு மாறி விடுவீர்கள். கடைசியில் வெறுமனே நேரத்தை வீணாக்கினோம் என்று பச்சாதாபப்படுவதாக சாஸ்திரங்களிலும் இருக்கிறது. கல்பம்-கல்பத்திற்கும் அதிகம் ஏமாற்றம் அடைகிறார்கள். பாபா எச்சரித்துக் கொண்டே இருக்கின்றார். குழந்தைகள் படித்து உயந்த பதவி அடைய வேண்டும் வேறு எந்த ஆசையும் இல்லை, இது தான் சிவபாபாவின் ஆசையாகும். அவருக்கு உதவக்கூடிய பொருளும் வேறு இல்லை. குழந்தைகளே உள்நோக்கு முகமுடையவர்களாக ஆகுங்கள் என்று பாபா புரிய வைக்கின்றார். உலகம் முழுதும் வெளி நோக்குமுகமுடையதாக இருக்கிறது. நீங்கள் உள்நோக்கு முகமுடையவர்களாக இருக்கின்றீர்கள். தங்களுடைய நிலையைப் பார்க்க வேண்டும் மற்றும் மாற்றுவதற்கும் முயற்சி செய்ய வேண்டும். நல்லது.

 

இனிமையிலும் இனிமையான காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாபதாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

 

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) சாட்சியாக இருந்து தங்களுடைய நடிப்பைப் பாருங்கள் - நாம் நல்ல விதத்தில் படித்து மற்றவர்களுக்கு படிப்பிக்கிறோமா இல்லையா? தங்களுக்கு சமமாக மாற்றும் சேவை செய்கிறோமா? தங்களுடைய நேரத்தை உலகாய விஷயங்களில் வீணாக்காதீர்கள்.

 

2) உள் நோக்குமுகமுடையவர்களாக ஆகி தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ள வேண்டும். தங்களுடைய நன்மையில் ஆர்வம் வைக்க வேண்டும். சேவையில் பிசியாக இருக்க வேண்டும். பாபாவிற்குச் சமமாக கண்டிப்பாக இரக்க மனமுடையவர்களாக ஆக வேண்டும்.

 

வரதானம்:

நற்பயனை ஏற்படுத்தக் கூடிய விதியின் மூலம் வெற்றியின் வரதானத்தை அடையக் கூடிய வரதானி மூர்த்தி ஆகுக.

 

சங்கம யுகத்தில் குழந்தைகளாகிய உங்களுக்கு ஆஸ்தியும் உள்ளது, வரதானமும் உள்ளது நற்பலனை உருவாக்குங்கள், வெற்றி அடையுங்கள். நற்பயனை உருவாக்குவது என்பது விதை ஆகும், வெற்றி என்பது பழம் ஆகும். விதை நன்றாக இருந்து பழம் கிடைக்காமல் போவது என்பது நடக்காத ஒன்றாகும். எப்படி நேரம், எண்ணம், செல்வம் என அனைத்தையும் நற்பலனுள்ளதாக ஆக்குங்கள் என மற்றவர்களுக்குச் சொல்கிறீர்களோ, அது போல தனது அனைத்து பொக்கிஷங்களையும் சோதியுங்கள் - எது நற்பலனுள்ளதாக ஆகியது, எது வீணாகிப் போனது. நற்பலனை உருவாக்கியபடி இருந்தீர்கள் என்றால் அனைத்து பொக்கிஷங்களாலும் நிறைந்து வரதானி மூர்த்தியாக ஆகி விடுவீர்கள்.

 

சுலோகன்:

பரமாத்மாவின் விருதைப் (அவார்டு) பெறுவதற்காக வீணான மற்றும் எதிர்மறையானவற்றைத் தவிர்த்து விடுங்கள்.

 

பிரம்மா தந்தைக்குச் சமமாக ஆவதற்கான விசேஷ முயற்சி:

 பிரம்மா தந்தைக்குச் சமமாக எந்த விசயத்திலும் விஸ்தாரத்தில் செல்லாமல், விஸ்தாரத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து புள்ளியில் அடக்கி விடுங்கள், புள்ளியாகி விடுங்கள், புள்ளி வைத்து விடுங்கள், புள்ளிக்குள் மூழ்கி விடுங்கள், அப்போது அனைத்து விஸ்தாரங்களும், அனைத்து ஜாலங்களும் ஒரு வினாடியில் அடங்கிப் போய் விடும், மேலும் நேரம் மிச்சமாகி விடும், கடின உழைப்பிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். புள்ளியாகி புள்ளிக்குள் ஐக்கியமாகி விடுவீர்கள்.

 

ஓம்சாந்தி